திருச்சி : பொன்மலை ரயில்வே மருத்துவமனையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வழங்க கோரி டிஆர்இயூ சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்னக ரயில்வே முழுவதிலும் உள்ள ரயில்வே மருத்துவமனைகளில் 2019ம் ஆண்டு ஆர்ஆர்சி தேர்வாணையம் மூலம் ஒப்பந்த முறையில் பணியில் அமர்த்தப்பட்ட சுகாதார பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் நிலையில் உள்ள 202 பணியாளர்கள் கொரோனா காலத்தில் நோய் தொற்று காலத்தில் தங்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல் அர்ப்பணிப்போடு பணியாற்றினர். அவர்கள் அனைவரையும் ரயில்வே மருத்துவமனை நிர்வாகம் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் பணிநீக்கம் செய்தது.
இதனால் ரயில்வே மருத்துவமனைகளில் சுகாதாரப் பணியாளர்கள் இல்லாத காரணத்தால் மருத்துவமனை சுகாதார சீர்கேடு அடைந்ததோடு, நோயாளிகள் படும் அவஸ்தைகள் மற்றும் பணியாளர்கள் இல்லாத காரணத்தால் நோயாளிகளை வலு கட்டாயமாக டிஸ்சார்ஜ் செய்வது, அறுவை சிகிச்சையை தள்ளிப்போடும் அவல நிலையை கண்டித்தும், நீதிமன்ற உத்தரவின்படி பணிநீக்கம் செய்த பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த வலியுறுத்தியு டிஆர்இயூ சார்பில் நேற்று (வியாழன்) பொன்மலை ரயில்வே மருத்துவமனை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு டிஆர்இயூ கோட்டத் தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். டிஆர்இயூ பென்ஷனர் சங்கம் வெங்கடேசன், டிஆர்இயூ திருச்சி கோட்ட செயலாளர் கரிகாலன், துணை பொதுச் செயலாளர் சரவணன், சிஐடியூ மாவட்ட துணை தலைவர் மணிமாறன், பொன்மலை ஒர்க் ஷாப் டிவிஷன் தலைவர் லெனின் ஆகியோர் கண்டன உரையாற்றினார். முடிவில் பொன்மலை ஓபன் லைன்கிளை செயலாளர் கவியரசன் நன்றி கூறினார்.
The post ரயில்வே மருத்துவமனையில் பணிநீக்கம் செய்யப்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்ககோரி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.